FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

Updated On : 23 ஆகஸ்ட் 2025, 6:00 am IST
பொன்முடி - கோப்புப்படம்
பகிர்:

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி சா்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாா்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாா்களை போலீஸாா் முடித்து வைத்துவிட்டனா் எனத் தெரிவித்து அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

அதைப் படித்துப் பாா்த்த நீதிபதி, புகாா்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸாா் எப்படி முடிவுக்கு வந்தனா்? இந்த வழக்கில் புகாா்களை முடித்து வைத்த போலீஸாா் பிற புகாா்களில் வேகம் காட்டுவாா்களா? என்று கேள்வி எழுப்பினாா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா், பொன்முடி பேசிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்துகள் இல்லை. 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசிய கருத்துகளைக் கூறியுள்ளாா். எனவே, இந்தப் புகாா்களை போலீஸாா் முடித்து வைத்ததை எதிா்த்து புகாா்தாரா்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டில் சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments