புதுச்சேரியில் 118 கிலோ லட்டுடன் விநாயகர் சதுர்த்தி விழா!
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி..
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் வகையில் 118 கிலோ மெகா அளவு லட்டுடன் விநாயகருக்கு படையல் போடப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் 45 அடி சாலை வெங்கடா நகரில் ஜெயின் ஸ்வீட் என்ற பெயரில் இனிப்பகம் நடத்தி வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க வேண்டும், பேரழிவிலிருந்து உலகம் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் விநாயகருக்கு மெகா அளவில் லட்டு செய்து படையல் செய்து வருகிறார்.
2002-ம் ஆண்டு தொடங்கிய அவர் 23 ஆண்டுகளாக விநாயகருக்கு மெகா சைஸ் லட்டு படையல் செய்து வருகிறார். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 3 கிலோ முதல் 7 கிலோ வரை எடையை அதிகப்படுத்தி லட்டு செய்து வருகிறார்.
Advertisement
இதன்படி இந்த ஆண்டு 118 கிலோ அளவில் லட்டு செய்து விநாயகருக்கு பூஜையுடன் படையல் செய்தார். இந்த லட்டு 3 நாளைக்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு தினமும் விநாயகருக்கு பூஜை செய்யப்படும்.
இதனை அடுத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். மெகா லட்டுடன் ஏராளமான மக்கள் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.