2026 தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு! கால அவகாசம் நீட்டிப்பு!!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்...
தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று(டிச. 10) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், "2026 சட்டப்பேரவை தோ்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவா்கள் தங்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் . கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தை புதன்கிழமை (டிச. 10) முதல் டிச. 15ஆம் தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். படிவத்தை பூா்த்தி செய்து கடைசி நாளான டிச. 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விருப்ப மனு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு இன்று முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு படிவங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் தற்போது டிசம்பர் 31, 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Application to contest TN election on behalf of Congress party begins today
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!