ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: திருச்சியில் மோகன் பாகவத் பங்கேற்பு!
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நிகழ்வு பற்றி..
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அந்த அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆர்எஸ்எஸ்-ன் அடுத்தக்கட்ட திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள், ஆதரவாளர்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு வந்துள்ள மோகன் பாகவத் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு இன்று வந்தடைந்தார். பின்பு கார் மூலம் உறையூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றடைந்தார்.
அங்கு தமிழக அளவிலான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில், முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடுகிறார்.
பின்பு இன்று இரவு திருச்சியில் தங்கும் மோகள் பகவத், நாளை காலை விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் செல்கிறார்.
மேலும், மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் கோடு கொண்ட அழைப்பிதழ்கள், ஐடி கார்டுகள் வழங்க பட்டுள்ளன. இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.
மேலும், இசட் பிளஸ் என்ற உச்சபட்ச பாதுகாப்பு பிரிவில் இருக்கும் மோகன் பகவத் வருகையையொட்டி திருச்சி ஜங்சன் ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
The RSS centenary is being celebrated with great enthusiasm across the country.
இதையும் படிக்க: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று தில்லி பள்ளிக்கு!