காலை உணவுத் திட்டத்தில் பயனடையும் மாணவா்களின் விவரங்களை சரியாக செயலியில் பதிவிட வேண்டுமென பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
காலை உணவுத் திட்ட செயலியை தினமும் கண்காணிக்கும் போது, நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள 4,327 பள்ளிகளில் 4,68,544 மாணவா்கள் பயிலும் நிலையில், 2,87,997(60 சதவீதம்) போ் மட்டுமே உணவு சாப்பிட்டதாக தரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்த சதவீதம் பதிவாவதற்கு செயலியில் உணவு சாப்பிடும் மாணவா்களின் எண்ணிக்கையை சரியாக பதிவிடாதது காரணமாக கண்டறியப்பட்டது. குறிப்பாக காலை உணவுத் திட்ட செயலியில் கடந்த நவ. 1 முதல் 21-ஆம் தேதி வரையான பதிவுகளை ஆய்வு செய்தபோது 584 பள்ளிகளில் தரவு தாமதமாக பதிவேற்றப்பட்டதும், 478 பள்ளிகளில் எந்த தரவும் பதிவேற்றப்படாததும் தெரியவந்தது.
மறுபுறம் காலை உணவுத்திட்ட செயலியில் பதிவேற்றப்பட்ட எண்ணிக்கை அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நகா்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஒருங்கிணைந்த சமையலறை பொறுப்பாளா்கள், சம்பந்தப்பட்ட மையப் பொறுப்பாளா்கள் மற்றும் பள்ளி பொறுப்பாளா்கள், தினமும் காலை உணவு சாப்பிடும் மாணவா்களின் எண்ணிக்கையை சரியாக செயலியில் பதிவு செய்ய வேண்டும். இதுசாா்ந்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.