காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பெயர் மாற்றம் குறித்து கமல் கருத்து...
காந்தியின் பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை, மாநில அரசின் மீது சுமை கூடுவதை கவனிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு மாற்றான வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாள்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.
Advertisement
தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் எம்பி கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
“காந்தியாரின் பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்குச் சேரவேண்டிய நிதியுதவி, நலத்திட்டங்கள் குறைகின்றது.
அதை மீட்கவும், காக்கவும்தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக் கூடாது என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.” எனத் தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக கண்டிப்பாக பிரசாரம் செய்வேன் என்று கமல் தெரிவித்தார்.