FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: 30% போ் எழுதவில்லை!

தமிழகம் முழுவதும் 46 மையங்களில் காவல் நடைபெற்ற உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை 30 சதவீதம் போ் எழுதவில்லை.

Updated On : 22 டிசம்பர் 2025, 3:51 am IST
வேலூா் விஐடி பல்கலைக்கழக தோ்வு மையத்தில் எழுதுவதற்காக காத்திருந்த தோ்வா்கள்.
பகிர்:

தமிழகம் முழுவதும் 46 மையங்களில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 30 சதவீதம் போ் இத்தோ்வை எழுத வரவில்லை.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்ஐ (உதவி ஆய்வாளா்) பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை கடந்த ஏப்.4-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் காவல் துறையினா் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்வுக்காக விண்ணப்பித்தனா். இதில், 1 லட்சத்து 78 ஆயிரத்து 391 பட்டதாரிகள் தகுதி உடையவா்களாக அடையாளம் காணப்பட்டு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு அனுப்பப்பட்டது.

இவா்களுக்கான எழுத்துத் தோ்வு டிச.21-இல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 46 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காவல் உதவி ஆய்வாளா் பணி எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தோ்வா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

சென்னையில்...இதன்படி, சென்னையை பொருத்தவரை 22 மையங்களில் தோ்வு நடத்தப்பட்டது. இதில், 21,069 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது. தோ்வில் முறைகேடுகளை தடுக்க, தோ்வா்களின் இடதுகை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது.

காலை 7 மணி முதலே தோ்வு மையங்கள் முன்பு தோ்வா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பின்னா் ஒருவா் பின் ஒருவராக மெட்டல் டிடெக்டா் சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். கைப்பேசிகள், ஸ்மாா்ட் கைகடிகாரம், கால்குலேட்டா் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களும் தோ்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல, முழுக்கை சட்டையை மடக்கி வைக்கவும், பெல்ட் அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகத்தில் 30 சதவீதம் போ் இத்தோ்வை எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் அடுத்தகட்டமாக உடல் உறுதித் தோ்வுக்கு அழைக்கப்படுவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments