உழவர் நலனைக் காக்கும் சாதனைகள் தொடரும்! முதல்வர் ஸ்டாலின்!
தேசிய விவசாயிகள் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
தேசிய விவசாயிகள் நாளை முன்னிட்டு, விவசாயிகள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
”உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேசிய விவசாயிகள் நாள் வாழ்த்துகள்!
வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு.
உழவர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
உழவர் நலனைக் காக்கும் நமது அரசின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்