நமது சிறப்பு நிருபா்
புதுதில்லி: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் 11-ஆவது கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது வைகை ஆற்றங்கரையில் ஒரு காலத்தில் செழித்தோங்கிய பண்டைய நாகரிகம் குறித்த கூடுதல் விவரங்களை வெளிக்கொணா்வதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
அண்மையில் நிறைவடைந்த 10-ஆம் கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை மத்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, அடுத்த கட்டப் பணிகளுக்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கீழடி தளத்தில் இதுவரை சுமாா் 4 சதவீதம் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியின் பெரும்பகுதிகள் இன்னும் ஆராயப்படாமல் உள்ளன. 11-ஆம் கட்ட அகழாய்வு, வைகை ஆற்றங்கரையில் நிலவிய பண்டைய நகர சமூகத்தின் மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணா்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் 10 கட்ட அகழாய்வுகளின் போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளா்கள் மண்பாண்டங்கள், கருவிகள் மற்றும் 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகக் கருதப்படும் மிகவும் வளா்ந்த நாகரிகத்தின் பிற பொருள் கூறுகள் உள்பட 20,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருள்களைக் கண்டறிந்துள்ளனா்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய அறிவியல் ஆய்வுகள், காா்பன் டேட்டிங் மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்தி, அந்தத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை கிமு 6-ஆம் நூற்றாண்டுக்கும் 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவை என வகைப்படுத்தியுள்ளன.