‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என வெட்கமே இன்றி கூறுகிறார் அமைச்சர்: இபிஎஸ் கடும் கண்டனம்!
‘தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை’ என கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்.
‘தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை’ என கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
Advertisement
Advertisement
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, ராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்ன? போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!! 2026, விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த திங்கள்கிழமை திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள், வடமாநில இளைஞரை வழிமடக்கி கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் விடியோ வெளியிட்ட நிலையில், 17 வயதுடைய நான்கு சிறுவர்களை திருத்தணி காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “போதைப் பொருள்களுக்கு எதிராக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சியினர் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்தது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Opposition leader Edappadi Palaniswami has strongly condemned Minister Ma. Subramanian for stating that there is no cannabis in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.