தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் குழு அமைக்கப்போவதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறிவருகிறதேதவிர எந்த செயல்பாடும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போதும் பிரதமரைச் சந்திக்கும்போதும் வலியுறுத்தி வருகிறார்.
மத்திய அரசு இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே மற்றும் இந்திய - இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்போவதாக பல ஆண்டுகளாக கூறிவருகிறது. ஆனால், அதுகுறித்த செய்திகள் எதுவும் இல்லை. குழு அமைத்து இதுதொடர்பாக கூட்டங்களை நடத்தி மீனவர்கள் கைது விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கிறோம்.
ஆளுநர் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு வஞ்சிக்கப்படுகிறது. இதுகுறித்து கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்" என்றார்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.