புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வராது என முடிவு செய்து, வழக்கு விசாரணை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டி சிபிசிஐடி போலீஸார் அண்மையில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகார்தாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, அதேபகுதியினரே மனிதக்கழிவைக் கலந்திருக்கிறார்கள் என்பதால் வன்கொடுமை சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டு குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு மாற்றக் கோரி, சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சனிக்கிழமை மாவட்ட எஸ்சி /எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட நீதிபதி ஜி.எம். வசந்தி தீர்ப்பை திங்கள்கிழமை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு வழக்குரைஞர் கே.என் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் மற்றும் வாதுரைகளை ஏற்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு வராது என முடிவு செய்து, வழக்கு விசாரணையை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றம்- 2க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இனி அந்த நீதிமன்றத்தில்தான் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
அதன்பிறகு குற்றம்சாட்டட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைத்து, குற்றப்பத்திரிகை வழங்கப்படும். விசாரணைகளும் இனி அங்குதான் நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.