தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!
விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள்...
தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை (பிப். 10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தைப்பூசத் திருநாளையொட்டி வடலூரில் நடைபெறும் விழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
அதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - கடலூர் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06147) முற்பகல் 11.15 மணிக்கு கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
எதிர்வழித் தடத்தில் பிற்பகல் 3.20 மணிக்கு கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கடலூர் துறைமுகச் சந்திப்பு - விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06148) மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இரு வழித்தட ரயில்களும் பிப்ரவரி 11,12,13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில்கள் விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும் கடலூர் துறைமுகச் சந்திப்பு - விருத்தாசலம் பயணிகள் சிறப்பு ரயில் (வ.எண்.06132) பிற்பகல் 1 மணிக்கு விருத்தாசலம் வந்தடையும்.
எதிர்வழித்தடத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விருத்தாசலம் - கடலூர் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06133), கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.10 மணிக்குச் சென்றடையும்.
இந்த இரு ரயில்களும் பிப்ரவரி 11 முதல் 13-ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் உ.மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிபாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பழனி தைப்பூசம்: சிறப்பு ரயில் இயக்கம்