முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன்? வெளியான விளக்கம்

பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

Updated On : 6 ஜனவரி 2025, 10:29 am IST
ஆளுநர் ஆர்.என். ரவி(கோப்புப்படம்)
பகிர்:

பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

பேரவையில் முதலில் தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ரவி முன்பே வலியுறுத்தியிருந்தார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதல்வரிடமும் சட்டப்பேரவை சபாநாயகரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.