மணலி, பெருங்குடி தவிர... சராசரி அளவில் காற்றின் தரக் குறியீடு!
போகி பண்டிகையையொட்டி காற்றின் தரக் குறியீடு சென்னையில் சராசரி என்ற அளவிலேயே இருப்பதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
போகி பண்டிகையையொட்டி காற்றின் தரக் குறியீடு சென்னையில் சராசரி என்ற அளவிலேயே இருப்பதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக் குறியீடு 97ஆகவும், பெருங்குடியில் 83ஆகவும் பதிவாகியுள்ளது.
தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் நாளைமுதல் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முறைப்படி மார்கழியின் கடைசி நாளான இன்று (ஜன. 13) போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
புகையில்லா போகியைக் கொண்டாட வேண்டும் என டயர், ரப்பர் பொருள்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி சார்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், போகி பண்டிகை நாளான இன்று மணலியில் காற்றின் தரக் குறியீடு வழக்கத்துக்கு மாறாக 97ஆகவும், பெருங்குடியில் 83ஆகவும் இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள (காலை 7 மணி நிலவரப்படி) அறிவிப்பில்,
மணலி - 97
கொடுங்கையூர் - 70
அரும்பாக்கம் - 77
ராயபுரம் - 79
பெருங்குடி - 83
வேளச்சேரி - 61
ஆலந்தூர் - 71
காற்றின் தரக்குறியீடு 51 - 100 என்ற அளவில் இருந்தால், திருப்திகரமானது. 101 - 200 எனில் மிதமானது. 201 - 300 எனில் மோசமான நிலை. 301 - 400 என்றால் மிகவும் மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.