உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, 3-வது நாள் (ஜன. 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.
அதன்படி, நேற்றுமுன்தினம் அவனியாபுரத்திலும் நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதில் ஏற்பட்ட தாமதத்தால் போட்டி சிறிது நேரம் தாமதமாகத் தொடங்கப்பட்டது. போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
மொத்தமாக 5,786 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1000 காளைகளை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், களமாடவுள்ள அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழப்படவுள்ளது.
காயம்படும் காளைகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கால்நடை மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அவற்றின் மேல்சிகிச்சைக்காக கால்நடை அவசர ஊர்திகளும் மதுரை மாநகராட்சி மற்றும் கால்நடைத்துறை சார்பாக தயார்நிலையில் உள்ளன.
இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.