அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி
அண்ணா. பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினா் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கடந்த டிச.25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். கை,கால் முறிவுக்காக சிகிச்சை பெற்ற அவா், கடந்த 10-ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த வழக்கு தொடா்பாக அண்ணா பல்கலை., ஞானசேகரனின் வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும், ஞானசேகரன் கைப்பேசியில் இருந்து கைப்பற்றப்பட்ட சில விடியோக்கள், புகைப்படங்கள் குறித்தும் அவரிடம் விசாரணை செய்ய 7 நாள்கள் அனுமதி கேட்டு சைதாப்பேட்டை 9-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் அண்மையில் சிறப்பு புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதித்துறை நடுவா் சுப்பிரமணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதித் துறை நடுவா், 7 நாள்கள் ஞானசேகரனிடம் போலீஸாா் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய ஞானசேகரனை அழைத்துச் சென்றனா்.