எடப்பாடி பழனிசாமி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி: காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: சேலம் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்து தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்ட புகாரில், அவர் மீது வழக்கு பதிவுசெய்ய ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜன. 22) தீர்ப்பளித்துள்ளது.
அப்போது, காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த பேரவைத் தேர்தலின் போது பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி, அதில் பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளதாக தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் 1-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிய பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டுள்ளது.