அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா கல்லூரிக்கு வருகை!
அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா கல்லூரிக்கு வருகை தந்திருப்பது பற்றி...
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் கல்லூரிக்கு திரும்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு திண்டுக்கல் அரசு கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரியும் நிகிதா, கடந்த ஜூன் 27 ஆம் தேதி காலை சென்றுள்ளார். அங்கு தனது நகை காணாமல் போனதாகவும், கோவில் காவலாளி அஜித் குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறை உயர் அதிகாரியிடம் நிகிதா வாய்மொழிப் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பிறப்பித்த உத்தரவின்பேரில், அஜித் குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள் 5 பேர், விசாரணை என்ற பெயரில் அவரை அடித்து கொடுமை செய்துள்ளனர். தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.
Advertisement
இந்த நிலையில், 5 தனிப்படை காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா மற்றும் தனிப்படை காவலர்களுக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகளை விசாரணை வளையத்தில் கொண்டுவர பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றியிருக்கிறது.
இந்த நிலையில், மருத்துவ விடுப்பில் இருந்த நிகிதா, விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
Professor Nikitha, who filed a complaint against Thiruppuvanam temple guard Ajith Kumar, has returned to the college after completing her medical leave.