தவெக தலைவர் விஜய்  கோப்புப்படம்
தமிழ்நாடு

படகுகளில் தவெக என்று இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய் கண்டனம்

திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மீனவர்கள் தங்கள் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் திமுக அரசு இதுபோன்ற செயல்களை கைவிடவில்லையெனில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதுபற்றி தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடித் தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.

படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை.

ஆனால் மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?

படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா?

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, மக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது.

தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

TVK leader vijay condemned that dmk govt refuse to provide subsidy if fishermen had written TVK party name on their boats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT