முகப்பு
தமிழ்நாடு

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்...

Updated On : 29 ஜூலை, 2025 at 1:02 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், இன்று (29.07.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (29.07.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவதை ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்று (29-07-2025) காலை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டிருப்பதையும், மற்றொரு சம்பவத்தில் 9 மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப்படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றிருப்பதையும், அச்சம்பவத்தில் 4 மீனவர்கள் தங்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் இதேபோன்று கைது செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவம் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெருத்த மனரீதியான மற்றும் பொருளாதார நெருக்கடியையும், வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.  

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

summary

Chief Minister M.K. Stalin has written a letter to the Union Minister of External Affairs, urging him to take action to release the fishermen arrested by the Sri Lankan Navy.

முழு கட்டுரையைப் படிக்க →