நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது குறித்து..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 25) அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தி.நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Advertisement
அந்தவகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தி.நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து, நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்
தொடர்ந்து செய்தியாளர்களுடன் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு நல்லகண்ணு மறைவு என்பது வருத்தமான செய்தி. பொதுவாழ்விலும் அரசியலிலும் இருக்கும் பலருக்கு பாடமாக இருந்தவர் நல்லகண்ணு. அவரின் மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், இன்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை அறிக்கை
நல்லகண்ணு உயிரிழப்பு குறித்து அரசு மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது,
''நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக பிப்.1ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 நாள்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும் அதி தீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர்.
இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாகக் குறைந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லகண்ணு அவர்கள் பிப்.25 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.