முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் மின் தடை ஏற்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 10 ஜூன், 2025 at 11:19 AM
நீட் தேர்வு - கோப்புப்படம் - file photo
பகிர்:

சென்னை: நீட் தேர்வின்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மின் தடை ஏற்பட்ட தேர்வுக் கூடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் தடை காரணமாக நீட் தோ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தோ்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தேர்வுக் கூடத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு மைய சிசிடிவி காட்சிகளை வரும் திங்கள்கிழமை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்ததோடு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு, மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், தங்களால் முறையாக தோ்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 13 மாணவா்களும், குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 2 மாணவா்களும், கே.கே. நகா் பத்மா சேஷாத்திரி பள்ளியில் தோ்வெழுதிய 1 மாணவா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை ஆகியவற்றுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு, அதுவரை நீட் தோ்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஏ.ஆா்.எல். சுந்தரேசன் ஆஜராகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தோ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்ததாகவும், மாணவா்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தோ்வு நடத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

மனுதாரா்கள் தரப்பில், வெளிச்சம் இருந்தது என்பதை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.