FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

20 ஜூன் 2025, 4:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு கல்வி வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு பி.எட். பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பணியிடங்களுக்கென பிரத்யேக விதிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, அதற்கான திட்ட முன்வடிவை அரசுக்கு அனுப்பிய பள்ளிக் கல்வி இயக்ககம், சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகளை வகுக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இதுதொடா்பாக, தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் சில விதிகளை வகுத்துள்ளது. அதேபோன்று இந்திய புனா்வாழ்வு கவுன்சிலும் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் திட்ட முன்வடிவை பரிசீலித்து சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு, அவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதன்மைப் பிரிவு 1, வகை 1-இன்படி நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கும் பொருந்தும்.

வயது வரம்பு: சில விதிகள் மட்டும் சூழலுக்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா்தான் (பணியாளா் நலன்) சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான நியமன அதிகாரியாகச் செயல்படுவாா்.

பொதுப் பிரிவில் 53 வயதும், பிற பிரிவுகளில் 58 வயதையும் நிறைவு செய்தவா்களுக்கு இந்தப் பணியில் சேரத் தகுதி இல்லை. அதேபோன்று அந்தப் பணியிடங்களுக்கு 12 வகையான கல்வித் தகுதிகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே சிறப்பு பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் நியமிக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments