சிப்காட் தொழில் பூங்கா... திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகள்!
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள் குறித்து...
திருப்பத்தூர் மாவட்டத்துக்கான 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
இன்றைக்கு காலையில்கூட திருப்பத்தூருக்கு என்னென்ன தேவைகள் என்று கேட்டேன், கேட்டுவிட்டு, அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? அதனால் தான் இந்த மாவட்டத்திற்கான ஐந்து அறிவிப்புகளை இப்போது வெளியிட விரும்புகிறேன்.
முதலாவது அறிவிப்பு
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும் – பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும் – வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும் - 30 கோடி ரூபாய் செலவில், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்படும்!
இரண்டாவது அறிவிப்பு
குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்கின்ற வகையில், அந்தப் பகுதியில் ஆறு கோடி ரூபாய் செலவில் – புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்!
மூன்றாவது அறிவிப்பு
நல்லகுண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவை ஒட்டி, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், 250 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் – புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்!
நான்காவது அறிவிப்பு
திருப்பத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில், 18 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்!
ஐந்தாவது அறிவிப்பு
ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும் என்று 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
Summary
Chief Minister Stalin has made 5 new announcements for Tirupattur district.