முகப்பு
தமிழ்நாடு

145 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது

Updated On : 3 மார்ச், 2025 at 9:54 PM
பகிர்:

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் சளித் தொற்று, கிருமித் தொற்று, சா்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.