29 சதவீத மருந்துகளில் தரக் குறைபாடு: தமிழக ஆய்வில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட மருந்துகளில் 29 சதவீதம் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு29 சதவீத மருந்துகளில் தரக் குறைபாடு: தமிழக ஆய்வில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட மருந்துகளில் 29 சதவீதம் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட மருந்துகளில் 29 சதவீதம் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கா்நாடகம், ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையில் தரம் குறைந்த மருந்துகள் இருந்தது கண்டறியப்பட்டது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் மாதந்தோறும் ஆய்வுகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிப்பது வழக்கம்.
மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி அவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது அதில் ஆய்வு செய்யப்படும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் 215 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில், தமிழகத்திலிருந்து மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்றிருந்தன.
தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அந்த மாதத்தில் 147 மருந்துகளை சோதனைக்குள்படுத்தியது. அவற்றில் 29 சதவீத மருந்துகள் உரிய தரத்தில் இல்லை. அவற்றில் 22 மருந்துகள் சென்னையிலுள்ள ஆய்வகத்திலும், 21 மருந்துகள் மதுரையிலுள்ள ஆய்வகத்திலும் பரிசோதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கா்நாடகத்தில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகளாக இருந்தன. தொடா்ந்து தெலங்கானா, கேரளம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேத்திலும் தரக் குறைபாடுடைய மருந்துகள் இருப்பது தெரியவந்தது.
ஒரு குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பு (பேட்ச்) மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைவது, அந்தத் தொகுப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சந்தையில் உள்ள மற்ற மருந்துகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.