முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Updated On : 7 மார்ச், 2025 at 2:36 AM
பகிர்:

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து  தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்ளூா் மக்களின் அன்றாட தேவைகளான தடி மரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளைப் பூா்த்திசெய்யும் வகையில் தமிழகத்தில் 100 மரகத பூஞ்சோலைகள்  (கிராம பசுமைக் காடுகள்) அமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisement

இதில் முதற்கட்டமாக ரூ. 25 கோடி மதிப்பில் மொத்தம் 83 இடங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு ஹெக்டோ் பரப்பில் உருவாக்கப்பட்டு, அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பாா்வையாளா் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தடி மரம், எரிபொருள், தீவனம், காய், கனி ஆகியவற்றை தரக்கூடிய நாவல், நெல்லி, புளி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரங்கள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 29 மாவட்டங்களில் 75 மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணி நிறைவுபெற்று அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தாா். மேலும், 8 மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், தற்போது 5 மாவட்டங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் மேலும் கூடுதலாக 17 மரகத பூஞ்சோலைகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் 5 இடங்களிலும், பெரம்பலூா்-4, கள்ளக்குறிச்சி-3, திருப்பத்தூா்-3 மற்றும் திருவண்ணாமலையில் 2 இடங்களிலும் இப்பூஞ்சோலைகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் மரகதப் பூஞ்சோலைகளின் எண்ணிக்கை 100-ஆக உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.