முகப்பு
தமிழ்நாடு

அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

Updated On : 13 மார்ச், 2025 at 9:05 PM
கோப்புப் படம்
பகிர்:

முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ‘நமது கோயில்கள்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறாா். இதில், தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் குறித்து அவதூறாகப் பேசியதாக ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ரங்கராஜன் நரசிம்மன், தன்னைப் பழிவாங்கும் நோக்குடன் அரசு இந்த வழக்கைப் பதிவு செய்திருப்பதாக சப்தமாகப் பேசினாா். இதையடுத்து நீதிபதி, இது ஒன்றும் சந்தையல்ல; நீதிமன்றம்”எனக் கண்டிப்புடன் தெரிவித்தாா்.

பின்னா் நீதிபதி, மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த மனு மீது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளாா்.