சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இதையடுத்து நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் செல்வதற்கு தயாரான 2 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் ஹைதராபாத்திற்கு தப்பிச் செல்ல முயன்றதும், அவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஜாஃபர் குலாம் ஹுசைன் மீது பல்வேறு மாநிலங்களில் நகைப் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் திருடப்பட்ட நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து காவல் ஆய்வாளர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த நகைகளை பறிமுதல் செய்வதற்காக ஜாஃபர் குலாம் ஹுசைனை போலீஸார் தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றபோது, தரமணி ரயில் நிலையம் அருகே திடீரென தான் பதுக்கி வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீஸாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தற்காப்புக்காக ஜாஃபர் குலாம் ஹுசைனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டத்தில் ஜாஃபரின் மார்பில் குண்டு பயந்து சுருண்டு விழுந்துள்ளார்.
பின்னர் உயிருக்கு போராடிய ஜாஃபரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜாஃபர் குலாம் ஹுசைன் உடலை உடல்கூறாய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜாஃபர் குலாம் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாஃபர் மீது பல்வேறு மாநிலங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் ரானிய கொள்ளையர்கள் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு: விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற இருவா் கைது
மும்பை போலீஸார் வெளியிட்ட 2021 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களில் ஜாபர் புகைப்படம் இடம் பெற்றிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுபோன்று ஒரு குழுவாக சென்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டு அவர்களது சொந்த மாநிலத்திற்கு தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில்,செவ்வாய்க்கிழமை சென்னையில் நகைப் பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு சென்னையை பரபரப்பாகிவிட்டு விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது கைதான ஜாஃபர் சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போலீஸார் என்கவுன்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின்னர் நடந்த 4 ஆவது என்கவுன்டர் இது.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோரை என்கவுன்டர் செய்த திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரியே, நகைப் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஜாஃபர் குலாம் ஹுசைனை துப்பாக்கி சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திரம் மாநிலம் ஓங்கோலில் போலீஸாா் கைது செய்தனா்.