2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.
வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக, அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவுகள் தொடங்கியிருக்கின்றன.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது அதன் செயலி வாயிலாக ஏராளமானோர் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்.
அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 90 நாள்களுக்கு முன், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.
2025ஆம் ஆண்டு சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்றன.
தற்போது வழக்கமாக மற்றும் வார இறுதி நாள்களில் இயக்கப்படும் பேருந்துகளின் முன்பதிவு அதிகமாக இருந்தால், அதற்கேற்ப ஜனவரி மாதம் அல்லது டிசம்பர் இறுதியில் சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது