வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!
வடதமிழகத்தில் இன்று(நவ. 4) பலத்த மழைக்கு வாய்ப்பு.
வடதமிழகத்தில் இன்று(நவ. 4) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று(நவ. 4) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு 150 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் முதல் 3 நாள்களில் மிகவும் அதிகம் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் நவம்பர் மாதம் இயல்புக்கும் குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வரும் நாள்களில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மா் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை அதே பகுதியில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை(நவ.4) நண்பகல் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மியான்மா்-பங்களாதேஷ் கடற்கரையையொட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை(நவ.4) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.