பாஜகதான் என்னை அழைத்தது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பாஜகதான் என்னை அழைத்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பாஜகதான் என்னை அழைத்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை அழைத்தது பாஜக தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன்.
பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். ஆகவே, எங்களை தமிழ்நாட்டின் அரியணையில் அமரவைக்க தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
ஒருங்கிணைப்பு பற்றி பேசும்போது என்ன வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி கூறினார் என எனக்குதான் தெரியும். குடும்பத்தில் சண்டை நடந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்ததே இல்லையா. அதெல்லாம் இயல்புதான். எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகியிருக்க முடியாது.
தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவை மிக அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசினார். சட்டப்பேரவையில் இபிஎஸ்க்கு பின்னால்தான் அமர்ந்திருந்தேன். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் என்ன குறை என்று அவர் கேட்டதில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.