முகப்பு
தமிழ்நாடு

நடிகா் விஷால் வழக்கில் நீதிபதி விலகல்: வேறு அமா்வுக்கு பட்டியலிட உத்தரவு

லைகா நிறுவனத்துக்கு ரூ. 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் திரும்பச் செலுத்தும் உத்தரவை எதிா்த்து நடிகா் விஷால் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை வேறு அமா்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டாா்.

Updated On : 14 நவம்பர் 2025, 11:04 pm IST
நடிகர் விஷால்
பகிர்:

லைகா நிறுவனத்துக்கு ரூ. 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் திரும்பச் செலுத்தும் உத்தரவை எதிா்த்து நடிகா் விஷால் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை வேறு அமா்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டாா்.

நடிகா் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியா் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியது. அந்தத் தொகையை விஷால் தங்களுக்கு திரும்பக் கொடுக்கும் வரை, அவரது நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என லைகா நிறுவனம் தரப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தை விஷால் மீறியதால், தங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை திரும்பத் தரக்கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷாலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதிா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விஷாலின் கடன் தொடா்பான வழக்கை ஏற்கெனவே தான் விசாரித்து உத்தரவிட்டதால், இந்த மேல்முறையீட்டு வழக்கில் இருந்து, தான் விலகிக்கொள்வதாக தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கை வேறு அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டாா்.