தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவது எப்போது?
தமிழகக் கடலோர மாவட்டங்களில் தொடங்கவுள்ள மழை தொடர்பாக...
அம்பாசமுத்திரம்: தமிழகக் கடலோர மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்தில் உறுதியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
”தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரி கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகக் கணிப்பு வெளியிட்டிருந்தோம்.
ஆனால், திங்கள்கிழமை மதியம் வரை தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையவில்லை. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மிக மிக மெதுவாகவே நகருகிறது. இதனால் மழை தொடங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் கட்டாயம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறேன். சற்று பொறுத்திருக்கவும், வரும் 24 மணி நேரத்திற்குள்ளாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.
குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கட்டாயம் மிக கனமழை பெய்யும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!