ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் இயங்கிவரும் அல் ஃபலாஹ் பல்கலையில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு, பல்கலையை மூட மாட்டோம் என்று பல்லை நிர்வாகம் தரப்பில் பேராசிரியர் ஒருவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதப் பின்னணி கொண்டதாகக் கூறி, அங்கு பணியாற்றியவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்ட நிலையில் பல்கலையின் அங்கீகாரம் குறித்து என்ஏஏசி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதனால், பல்கலையில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் சிலர், நேரடியாக பல்கலைக்கு வந்து, அதன் எதிர்காலம் குறித்து தாங்கள் அடைந்திருக்கும் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் பல்கலை.க்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பல்கலையில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம், உரிமத்தை ரத்து செய்யும் அபாயமும் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பல்கலை அங்கீகார அமைப்பும் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாகப் புகார் வந்ததால் அது இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அது இணையதள வடிவமைப்பின்போது நேரிட்ட தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமலாக்கத் துறையும், பல்கலை நிர்வாகத்துக்கு வந்த பணம் குறித்து விசாரித்து வருகிறது.
எனினும், பல்கலைக்கழகத்தை ஒருபோதும் மூட மாட்டோம் என்று மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் பல்கலை நிர்வாகம் சார்பில், பேராசிரியர் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.