கோயம்புத்தூரில் நடைபெற்ற டி.என்.ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 43,844 கோடி முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நீலாம்பூரில் உள்ள தனியாா் விடுதியில் தமிழ்நாடு தொழில் துறை சாா்பில் தமிழக தொழில் காப்பு புத்தொழில் உருவாக்க மையம் (டி.என்.ரைஸிங்) நடத்தும் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (நவ. 25) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், 42,792 கோடி ரூபாய் முதலீட்டில், 96,207 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 111 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், 1,052 கோடி ரூபாய் முதலீட்டில் 4,502 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தித் தொழில் மேம்பாட்டிற்காக, ஆவாரம்பாளையத்தில் 14.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக, மூப்பேரிப்பாளையத்தில், 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
அத்துடன், 9 நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.