தஞ்சையில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் ஒருசில குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், கீழதோட்டம், ஏரிப்புறக்கரை ஆகிய கடல் பகுதிகளில் கடல் நீர் பெருக்கெடுத்துள்ளதால் கடல் நீர் சாலை மட்டத்தை விட அரை அடி உயர்ந்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கடற்பகுதியான ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய கரையோர பகுதியில் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.
சாலை மட்டத்திலிருந்து அரை அடி உயரம் அளவு உயர்ந்து, கடல் நீர் நிரம்பி சாலை எது? வாய்க்கால் எது? கடல் எது ? என்று தெரியாத அளவிற்கு கடல் நீர் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து கடல் நீர் பெருக்கெடுத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது. கடந்த கஜா புயலின் போது கடல் நீர் பெருக்கெடுத்து ஏரிப்புறக்கரை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளான நிலையில் தற்போது கடல் நீர் பெருக்கெடுத்து இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.