விசலூர்-எடுத்துக்கட்டி வடிகால் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!
விவசாய நிலங்களை பாதுகாக்க ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் நீர்வளத்துறை தீவிர கண்காணிப்பு..
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே உள்ள விசலூர்- எடுத்துக்கட்டி ஊராட்சிகளில் உபரி ஆறு வடிகால் வாய்க்காலில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியை நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.
பொறையார் அருகே உள்ள விசலூர், எடுத்துக்கட்டி பகுதியில் விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழை நீர் மற்றும் வெள்ளம் சூழாமல் பாதுகாத்திட விசலூர் முதல் எடுத்துக்கட்டி ஊராட்சி வரை 5 கிலோ மீட்டர் வரை செல்லும் உபரி ஆறு வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள், செடி கொடிகள் பொக்லின் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை மாவட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலர் கே. சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.