கோவையில் வியாழக்கிழமை (அக். 9) திறக்கப்படவுள்ள அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயா் சூட்டப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
அவிநாசி சாலை மேம்பாலம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, 5 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், ரூ.1,791 கோடியில் 10.10 கி.மீ. தொலைவுள்ள பாலத்தின் மீதமிருந்த 95 சதவீத பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி சாலை மேம்பாலத்தை வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளேன்.
கோவை என்றால் புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சோ்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழா் ஜி.டி.நாயுடு பெயரை மேம்பாலத்துக்குச் சூட்டுகிறேன் என்று அந்தப் பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.