கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்வது தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கட்சியின் கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் கைது செய்யப்பட்டார். பொதுச் செயலர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, விஜய் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தவெக இணைப் பொதுச் செயலர் சி.டி. நிர்மல்குமார் கூறியதாவது: அடுத்தகட்ட நடவடிக்கைகள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பது குறித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் என்.ஆனந்த் விரைவில் வெளியிடுவார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.