பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 22-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இது குறித்து எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடலூரில் மின்னல் தாக்கி 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனா். தென் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இதற்கு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அளித்த பதில்:
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழைக் காலத்தில் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என்று அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக, வரும் 22-ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.