திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவானது, புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்ட பின்பு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர்.
தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பால், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும்.
விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாச்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11 மணி, மாலை 5 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26 ஆம் தேதி வேல் வாங்குதல், 27 ஆம் தேதி சூரசம்ஹார லீலை, 28 ஆம் தேதி காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள், கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.