பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் 20.84 அடியாகவும், பூண்டி ஏரியின் கொள்ளளவான 35 அடியில் 33 அடியாகவும் நீரின் இருப்பு அதிகரித்துள்ளது.
மேலும், புதன்கிழமை காலை நிலவரப்படி செம்பரம்பாக்கத்துக்கு வரும் நீரின் அளவும் 2,170 அடியாகவும், பூண்டிக்கு வரும் நீரின் அளவு 2,510 அடியாகவும் உள்ளது.
இதன்காரணமாக செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை 500 கனஅடியாகவும், பூண்டியில் இருந்து 4,500 கனஅடி உபரிநீரும் திறக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, பூழல் ஏரியில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்லும் அடையாறு, கொசஸ்தலை ஆறு கரையோரங்களில் தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை விளக்கம்
சென்னை சுற்றுவட்டார ஏரிகளில் நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று நீர்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டியில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருகிறது. மிக கனமழை பெய்தாலும் வெள்ள நீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக கடலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.