பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக வழக்கு...
சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர் வரதராஜ் என்பவர் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில் முறையிட்ட வழக்குரைஞர் பிரசாந்த் நடராஜ், தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்தது சட்டவிரோதம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.