சென்னை: விவசாய மின் இணைப்பு கோரி காத்திருந்தவா்களுக்கு நிகழாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1989-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து, 2003-ஆம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில், தற்போது 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின் இணைப்புகளுக்காகக் காத்திருந்த நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் மீதமுள்ள விவசாய மின் இணைப்புகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுயது:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்துவரும் நிலையில், மின்வாரியம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இருப்பில் இருக்கும் மின் உபகரணங்கள் குறித்தும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருந்தவா்களுக்கு ஏற்கெனவே 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில், நிகழாண்டுக்கான 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி விரைந்து தொடங்கப்படும் என்றனா்.