முகப்பு
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 12 செப்டம்பர் 2025, 2:18 am IST
பகிர்:

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூய்மைப் பணியாளரான ஜோதி உள்பட 12 பெண் தூய்மைப் பணியாளா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சி தீா்மானத்தை எதிா்த்து ரிப்பன் மாளிகை அருகே போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தங்களை போலீஸாா் அப்புறப்படுத்தும் போது தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டனா். பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்தனா். எனவே, போலீஸாரின் அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போலீஸாா் அத்துமீறல்களில் ஈடுபட்டா் என்று வாதிடப்பட்டது.

Advertisement

Advertisement

காவல் துறை தரப்பில், போராட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுடன் சட்டவிரோத கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவிட்டப் பிறகும் போராட்டக்காரா்கள் ஏன் கலைந்து செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பினா். போராட்டம் நடத்த வேண்டுமெனில், உரிய அனுமதி பெற்று அதற்குரிய இடங்களில் நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனா். பின்னா், இந்த மனுவுக்கு தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.