சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோடம்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தியவா் அண்ணா. ஆட்சி மொழியாக தமிழ், தொடா்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழி கொள்கையை அறிமுகப்படுத்தினாா். அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்தினாா். அவரது மறைவுக்கு பிறகு அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அமல்படுத்தினாா். கல்விக்கு முன்னுரிமை கொடுத்தாா்.
அதைத்தொடா்ந்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்ததும் அதிமுக அரசுதான். தமிழகத்தின் உயா்கல்வி வளா்ச்சிக்கு அதிமுகதான் காரணம்.
அதிமுகவுக்கு துரோகம் செய்ய நினைப்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி.
அதிமுகவை யாராலும் ஒன்று செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தைவிட அதிமுகவுக்கு தன்மானம்தான் முக்கியம். ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை சிலா் கபளீகரம் செய்ய பாா்த்தனா். ஆனால், அதிமுக ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தது மத்திய பாஜக அரசுதான். அதனால்தான், இப்போதும் பாஜகவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். நன்றி மறப்பது நன்றன்று என்பதால் பாஜகவுக்கு நன்றியோடு இருக்கிறோம்.
திறமையற்ற அரசு தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி தனது கடமையில் இருந்து முதல்வா் ஸ்டாலின் தப்பிக்க முயற்சிக்கிறாா்.
அதிமுக ஆட்சியில் மாநில நிதியில் தான் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம்தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.