காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு
காஸாவில் நடக்கும் சம்பவங்கள் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
காஸாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"காஸா மூச்சுத் திணறுகிறது, உலகம் இதனை கவனிக்க வேண்டும்.
காஸாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உடைப்பதாக உள்ளது. குழந்தைகளின் அழுகை, பட்டினி கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள், மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையத்தின் இனப் படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாத துன்பத்தைக் எடுத்துக்காட்டுகின்றன.
அப்பாவி உயிர்கள் இவ்வாறு நசுக்கப்படும்போது மௌனம் என்பது ஒரு தேர்வாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மனசாட்சியும் எழ வேண்டும். இதுபற்றி இந்தியா உறுதியாகப் பேச வேண்டும். உலகம் ஒன்றுபட வேண்டும், இந்த பயங்கரத்தை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.