வேலுநாச்சியார் சிலையைத் திறந்துவைத்த முதல்வர்  DIPR
தமிழ்நாடு

வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வேலு நாச்சியாரின் பெயர்! - முதல்வர் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வேலு நாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலு நாச்சியாரின் திருவுருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார்.

முன்னதாக வேலு நாச்சியாரின் வீரத்தை வருங்கால தலைமுறையினா் அறிந்து போற்றும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வேலு நாச்சியாரின் சிலையை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம், 2023-ஆம் ஆண்டு டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஊர்தியில் வேலுநாச்சியார் திருவுருவச்சிலை எனத் தொடர்ந்து அவரது புகழ்பாடி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி - ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.

இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன்.

மண் - மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும் - அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Vellore Police Training School will be named as Velunachiyar: MK stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT